Header Ads

உனக்குள்ளே நான்...

💗காத்திருப்புக்களும் சுகமாகப் போகும் நாட்களுக்காகக் காத்திருக்கின்றேன்...
நான் என்ற அடையாளம் அழித்து முழுதும் நீயாகவே மாற்றிவிட்டாய்

அத்தனையும் உடைத்துப் போடும் அந்தப் புன்னகையைப் பார்க்கவேனும்
நான் உன்கூடவே இருக்கட்டுமா??

அத்தனை அசதியிலும் உன் நெஞ்சம் சாய்த்து என் தலை கோதும் உன் விரல்களை தேடியேதான் என் பொழுதுகள் போகவேண்டுமா??

பசிக்கவேயில்லையென நீ அடம்பிடிக்கும் பொழுதுகளில் பலவந்தமாக ஊட்டிவிடவேனும் நான் இருக்கவேண்டாமா??

நடந்தவைகளையெல்லாம் ஒப்புவிக்க நீ என்னைத் தேடும் பொழுதுகளில் ,
அவற்றைக் கேட்கவாவது நான் உன்னுடன் இருப்பதுதானே முறை.....
யாரையும் பற்றிக் கவலைப்படாமல்

நீயும் நானும் நடத்தும் பாட்டுக் கச்சேரிகளுக்கு ஸ்வரம் சேர்க்கவேணும் என்னைக் கூடவே இருக்கச் சொல்லக்கூடாதா??
போகிறேன் என்று நீ சொன்னதும்,

நான் உன்னிடம் கேட்கும்
"இன்னும் ஒரு ஐந்து நிமிடம்" உன்னையறியாமல் அரைமணி நேரம் ஆவதும்
இனி எப்போது என்று எதிர்பார்த்து இருக்கட்டுமா??

இருவரும் மாலையில் அருந்தி மகிழ்ந்த தேநீர் கோப்பை, இனி நான் தனி இதழ் கொள்கையில்
நீ எங்கே என்று கேட்டால் ,
நான் தான் பதில் சொல்ல வேண்டுமா??

ஆயிரம் முறை நீ சொல்லும் "ஐ லவ் யூ" க்கள்
இனி குறைந்து போய்விட வாய்ப்புகள் ஏதும் உள்ளதா??

பேச்சின் நடுவிலே நீ உறக்கம் கொள்கையிலும்
குழந்தையைப் போல் இரசித்தே பழகிவிட்டேனே....
இனி அந்த குழந்தை முகம் காணும் வாய்ப்பு எனக்கு எப்போது கிட்டும்??

புகைப்படம் எடுக்க தொலைபேசி எடுத்ததும்
நீ கலைந்திருக்கும் உன் முடியை சரி செய்வதும்,
நான் பார்க்கையில் மீண்டும் கலைத்துவிட்டு மௌனமாய் சிரிப்பதும்....
இனி நினைத்துப் பார்க்க மட்டும் தான் முடியுமா??

தேவைகளை மீறியும் எல்லாம் பார்த்து பார்த்து செய்வதும்,
தேவைகளின் போது என் தாயாய் தந்தையாய் அவதாரம் எடுப்பதும்
உன்னால் மட்டும் தான் இயலுமென்று அவர்களிடம் சொல்லிப் புரிய வைக்கட்டுமா?

வழமைக்கு மாறாக நான் உளறுகிறேனே....
இதைப் புரிந்துகொள்ளவேனும் என் மொத்தக் காதலை அள்ளி உன் கையில் தந்துவிட்டு போகட்டுமா???
Powered by Blogger.