Header Ads

எப்பொழுதாவது......❤❤


உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன்
வீடு தேடி வருகையில் மெய் சிலிர்த்து
ஒரு கணம் அப்படியே நின்றதுண்டா..??

தேநீர் கோப்பை அவன் கைக்கு பரிமாறுகையில்,
அவன் ஒற்றை விரல் நுனி தீண்டலில்
சிலாகித்து நின்றதுண்டா...??

அவன் அடம்பிடிக்கும் கணங்களில்
அவனுக்காக என்று விட்டுக்கொடுத்து
அந்த வெற்றிப் புன்னகையை இரசித்ததுண்டா......??

குடும்ப அங்கத்தவர்களை அவனுக்கு அறிமுகம் செய்கையில்,
அதற்கு தகுந்தவாறு அவன் இசைவாக தடுமாறுகையில்,
புன்னகையில் நீங்களே சமாளித்ததுண்டா...??

உங்கள் தாய் தந்தையை
அவனின் தாய் தந்தையென மதிக்கும் பொழுதுகளில்
நல்லவனைத் தேர்ந்தெடுத்துவிட்டதாய்
பெருமிதம் கொண்டதுண்டா??

அத்தனை சந்தர்ப்ப குறைகளையும்
முகம் சுளிக்காமல் அவன் எதிர்கொள்கையில்
ஒரு கணம் அவனை அள்ளி அணைத்திட துடித்ததுண்டா...??

அத்தனை முகமாற்றமும் கவனித்து
என்ன என்று ஒவ்வொன்றுக்காய் அவன் புருவம் உயர்த்துகையில்,
கவலைகளை கண்ணில் மறைத்ததுண்டா...??

அவனின் அக்கறைக்காய் குரல் உயர்த்தி அதட்டிப் பேசுகையில்
அவன் பொய்யாகப் பயந்து பணிகையில்
உதடு அசையாமல் வரும் சிறு புன்னகையை அவனிடம் மறைத்து மகிழ்ந்ததுண்டா....??

உங்கள் தாயின் கையால் சமைத்த உணவை
அதிகளவாய் அவன் பாராட்டுகையில்,
புதிய ஒரு இன்பச்சுவையை அந்த உணவில் முதன்முதலாக உணர்ந்ததுண்டா....?

அவனின் சிறு சிறு அசைவுக்கும்
நீங்கள் அர்த்தம் கற்பிக்கையில்,
அவனின் கண்களில் காதல் ததும்புகையில்
உங்கள் கண்களாலே அவனுக்கு காதல் கற்பித்ததுண்டா...??
 
குடும்ப சகிதம் வெளியே சென்றிருந்தாலும்
நீ என்னவள் என்று அவன் அடிக்கடி கோடிட்டு காட்டுகையில்
உச்சி குளிர்ந்து அவன் கன்னம் மோந்ததுண்டா....??

இப்படியும் காதலிக்க இயலுமா என்று அவனை நான் கேட்கையில்,
இன்னமும் காதலிப்பேன் பாரென்று அவன் சட்டைக் காலர் உயர்த்துகையில்,
அந்தக் காலரைப்பிடித்தே அவனை அப்படியே அருகில் இழுத்து அவன் கண்ணோடு காதல் சொன்னதுண்டா...??

தனிமையில் காதல் கவிதைகளே உளறினாலும்
குடும்பத்தவர்களின் முன்னிலையின்
அவனின் ஒற்றைக் காதல் வார்த்தையில் வானளாவ வெட்கப்பட்டதுண்டா...??

சிறுகச் சிறுகச் சேமிக்கும் காதல்
நாட்கள் நகர நகர அதிகரிப்பதாய்
எண்ணி எண்ணிப் பூரித்துப் போனதுண்டா..??

அனைவரின் முன்னிலையில் சென்றுவருகிறேன் என அவன் கண்ணில் சொல்கையில்,
கண்களில் ததும்பும் கண்ணீரை மறைத்தே அவனுக்கு கண்களாலே சம்மதம் சொன்னதுண்டா..??

அவனை தன்னவனாக்கும் நாளை எதிர்பார்த்து
அவனை மேலும் மேலும் காதலித்து
என்னைப் போல் இன்ப வேதனை அனுபவித்ததுண்டா...??
Powered by Blogger.