Header Ads

அவனுள் தொலைக்கிறேன் என்னை...

உன் அருகாமைக்கும் அன்புக்குமாய்
உன்னுள்ளே தொலைந்து தொலைந்து காதல் செய்த இவளை எதற்காகவடா தள்ளி நிற்கச் செய்கிறாய்....??

இந்தத் தொலைதூரக் காதல் பைத்தியக்காரங்களெல்லாம் தேவையில்லை எனக்கு...

முகத்தில் அறைவதாயினும்
முகர்ந்து கடிப்பதாயினும்
என்னை உன் மடியில் கிடத்திய பின்பு
நடந்தேறியாகட்டுமடா

இடுப்பைக் கட்டியணைத்து இடையதிலே முகம் புதைத்து
"நான் உன்னுடன் கோபம் என்பாயே..."
எனக்கு அந்த நாட்கள் தான் வேண்டும்

நெஞ்சிலே எட்டி உதையும் கால்களைப் பற்றிப் பிடித்து முத்தம் வைப்பாயே...
எனக்கு அந்த உதடுகள் இப்பொழுதே வேண்டும்

பொய்க்காய்ச்சல் வந்து புலம்பும் பொழுதிலெல்லாம....
கட்டியணைத்து காதல்சொல்வாயே..
உடல் உஷ்ணமாகி உறங்க இடம் தேடுகிறேனே...
ஒருமுறை நீ வந்துவிட வேண்டும்....

பசிக்கவில்லையெனிலும் பலவந்தமாய்
ஊட்டிவிடும் பொழுதுகளிலெல்லாம்
குழந்தையாய் முகம் சுருக்கிப் பார்ப்பாயே...
ஒருமுறை அருகில் வந்து நீ என் குழந்தையாகிவிட வேண்டும்...

உன் நெஞ்சில் என் தலைசாய்த்து கதைகள் சொல்லி நிம்மதிப் பெருமூச்சுவிடுவாயே...
அந்த மூச்சின் ஏற்ற இறக்கம் அனுபவித்திட ஏங்கும் இவளை ஒருமுறை நீ புரிந்துகொண்டு விட வேண்டும்

இனி புலம்பித் தீர்க்கமாட்டேன்...
காதல் சொல்லி உன்னைக் காயப்படுத்தமாட்டேன்....
நினைந்து நினைந்து உருக மாட்டேன்..
உன்னில் பித்தாகிவிடமாட்டேன்....

என் உண்மை உணர்வுகளை மறைத்து,
நாடகமாடி உன்னில் தோற்றுவிடத்தான் போகிறேன்....
எங்கே தொலைத்தாய் உன் காதலை என
என்னுள் வந்து தேடி எடுத்துவிட்டுப் போ..

அந்த நொடியில் இந்தக் காதலின் வலியை உனக்கு ஒற்றை முத்தத்தில் உணர்த்திவிட வேண்டும்
Powered by Blogger.